கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் இந்தியாவின் புதுடெல்லி நகரில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை மாணவர்கள் 143 பேர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 1195 எனும் இலக்க விமானம் இன்று காலை 9.05க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், எயார் பஸ் 321 – 251 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானத்தில் 8 பேர் கொண்ட விமானப் பணியாளர்கள் மட்டுமே சென்றுள்ளதாக எமது விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த விமானம் நண்பகல் 12.35க்கு இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைய உள்ளதுடன், மீண்டும் மாலை 5 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.