வெளிமாவட்டங்களில் சிக்கி நிர்க்கதியானவர்களை முறையாக பொறிமுறையூடாக அவர்களின் உறவினர்களுடன் சேர்ப்பது அவசியம் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்….
வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை சுகாதார முறைப்படி உறவினர்களுடன் விரைவில் சேர்க்க வேண்டியது கட்டாயமானது.
அவர்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழ்நிலையில் தவறான வழியில் சொந்த இடங்களுக்கு வருவதற்கு அவர்கள் எப்படியும் முயற்சிப்பார்கள்.
இதனைத் தடுக்க முறையான செயன்முறையில் உறவினர்களிடம் அவர்களை சேர்க்கவேண்டும்.
நாட்டில் பல நாட்களாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதனால் வெளி மாவட்டங்களில் சிக்கியிருப்பவர்கள் உறவினர்களுடன் சேர நினைப்பது தடுக்க முடியாத மனநிலையாகும்.
இதனைவிட கொரோனா அச்ச நிலைமை பரவியிருப்பதனால் அவர்கள் விரைவாக குடும்ப உறுப்பினர்களை சந்திக்க முயற்சிப்பார்கள்.
ஆகவே அவர்கள் இவ்வாறு அனுமதியின்றி தவறான வழிகளில் வர முயற்சிக்கலாம். ஆகவே அது தடுக்கப்பட வேண்டும்.
அதேசமயம், அவர்களுடைய மனநிலையைப் பொறுத்தவரை அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார்கள்.
ஏதாவது ஒரு வழியை நாடி அவர்கள் உறவினர்களுடன் ஒன்றிணைய முயற்சிக்கக் கூடும்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொருத்தமான வழிமுறையில் விரைவாக இவ்வாறு பிரிந்து இருப்பவர்களை இணைப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் என்ன நடந்துவிடுமோ என்ற பயப்பீதியில் இருக்கின்ற காரணத்தினால் இவர்கள் குடும்பத்தோடு ஒன்றிணையக்கூடிய சகல வழிகளையும் நாடுவார்கள்.
ஆகவே இதனைக் கருத்திற்கொண்டு, இதற்குப் பொறுப்பான சகல அதிகாரிகள் அவர்களுக்கான நடைமுறைகளைத் தெரியப்படுத்தி அவர்களை பாதுகாப்பான முறையில் உறவினர்களடன் ஒப்படைக்க வேண்டும். என மேலும் குறிப்பிட்டுள்ளார்.