கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இம்மாதம் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பாடசாலை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்கு இடை யில் கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இறுதி முடிவு இன்னமும் எட்விடப்படவில்லை .
இந்நிலையில் கல்வி அமைச்சின் குழு ஒன்று அண்மைய நாட்களில் அனைத்து மாகாணங்களுக்கும் சென்று பாடசாலைகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதும் அதிபர்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைச் செயற்படுத்துவது குறித்து அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும்போது, பலர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால் அவர்களால் பாடசாலை மற்றும் போக்குவரத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது.
கொரோனா தாக்கதின் ஆணிவேரைக் கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதால் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக போக்குவரத்து சேவைகளை வழங்க முடியுமா என்பது தொடர்பில் ஆலோசனைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்தோடு பாடசாலைகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்களில் ஒவ்வொரு வகுப்பறையிலும் நாற்காலிகளுக்கிடையேயான தூரம், மாணவர்கள் அடிக்கடி கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்குகின்றன.
இருப்பினும், ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவது நடைமுறையில் இருக்காது எனவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.