கொரோனா அச்சம் நீங்கும் வரையில் பொதுத்தேர்தலை நடாத்த முடியாது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தல் திகதி குறித்து விமர்சனங்களை முன்வைக்க முன்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியுமா என்பதே இன்னமும் சந்தேகமாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த சந்தேகம் நீங்கும் வரையில் தேர்தலை நடத்த மாட்டோம்.
பகுதி பகுதியாக தேர்தலை நடத்த சாத்தியப்பாடுகள் இல்லை, அவ்வாறான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் சகல கட்சிகளின் நிலைப்பாட்டினை ஆராயவேண்டும். ஆனால் இப்போதைய சூழ்நிலை அவ்வாறு அல்ல. யார் எதிரி என கண்ணுக்கு தெரியவில்லை. தாக்கம் எவ்வாறானது என்பதை கண்டறியவும் முடியாதுள்ளது.
அதுமட்டுமல்ல பாராளுமன்ற தேர்தல் ஒன்றினை நடத்தும் வேளையில் 55 வீதமளவில் வாக்குகள் பதியப்படுவது போதுமானது என கூற முடியாது. குறைந்த பட்சம் 70 வீதமான வாக்குகளையேனும் மக்கள் பிரயோகித்திருக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் முதலில் முற்றுமுழுதாக நாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும். அரசு அதற்கான வேலைகளை முதலில் முன்னெடுக்கட்டும்.
பின்னர் தேர்தல் குறித்து பார்க்கலாம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுடன் தேர்தலை வைக்க மாட்டோம். சுகாதார அதிகாரிகள் கூறும் வரையில் எமது பக்கம் எந்த தீர்மானமும் எடுக்கப்படாது. ஒரு சிலர் கூறுவதை கேட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ள மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.