யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் குணமடைந்துள்ளனர்.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் வெலிக்கந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு, சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தவர்களில் நால்வர் முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ளனர்.
இத்தகவலை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ். அரியாலையைச் சேர்ந்த நால்வரை வெலிகந்தையிலிருந்து அம்புலன்ஸில் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு வீட்டிலேயே இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை தேவாலயத்தில் சுவிஸிலிருந்து வருகைதந்த போதகரால் கடந்த மார்ச் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஆராதனையில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்;படுத்தப்பட்டிருந்தனர்.
சுவிஸ் போதகருடன் நெருக்கமாகப் பழகிய மானிப்பாயைச் சேர்ந்த போதகர், சுவிஸ் போதகரின் சாரதி உள்ளிட்ட அரியாலை மற்றும் மானிப்பாய், வவுனியாவைச் சேர்ந்த 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் 20 பேரிடமும் ஏப்ரல் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் மாதிரிகள் பெறப்பட்டு முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் மானிப்பாயைச் சேர்ந்த மதபோதகர் உள்பட 6 பேருக்கு கொரோனாத்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் 6 பேரும் வெலிகந்தை வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
அவர்களில் நால்வரே இவ்வாறு முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.