இலங்கையில் பலநாட்களாக தடைப்பட்டிருந்த தபால் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பி வருகின்றது.
கொரோனா வைரஸ் பரவும் நாடளாவிய ரீதியில் காவற்துறை ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தடைப்பட்டிருந்த தபால் சேவை கடந்த புதன்கிழமை (22) முதல் வழமை நிலைக்குத் திரும்பியிருந்தது.
மார்ச் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் தபால் திணைக்களத்தின் சகல செயற்பாடுகளும் தடைப்பட்டிருந்தன.
தற்போது சில மாவட்டங்கள் தவிர்ந்து ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு சுமூகமான நிலை ஏற்பட்டு வருவதையிட்டு தபால் திணைக்களத்தின் சேவைகளும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதோடு தபால் விநியோகமும் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.
இன்றையதினம் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதான தபால் அலுவலகங்கள் தொற்று நீக்கப்பட்டு கருமபீட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பேணும் வகையில் கை கழுவுதல், சமூக இடைவெளியை பேணுவதற்கான வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தபாலகங்களுக்கு கொழும்பில் இருந்து தபால் பொதிகள் வந்த வண்ணம் உள்ளது.
எனினும் அவற்றை விநியோகம் செய்வதில் அச்ச நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து எதுவித தபாற்பொதிகளும் அம்பாறை மாவட்டத்திற்கு கொண்டு வரவில்லை என்பதுடன், வழமை போன்று புகையிரதத்தில் தபால் சேவை இடம்பெறவில்லை எனவும், தபால் திணைக்களத்திற்குரிய பிரத்தியேக வாகனத்திலே தான் தபால் சேவை இடம்பெறுவதாக தபாலக உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அக்கரைப்பற்று காவற்துறை பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதால், அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை அஞ்சல் அலுவலகங்களில் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
