உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில்……
கொடூர தீவிரவாத கருத்தினைக்கொண்ட ஒரு குழுவினர் 2019 ஏப்ரல் 21 ஞாயிறன்று முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும் சுற்றுலா ஹொட்டல்கள் சிலதையும் இலக்குவைத்து மேற்கொண்ட பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைகின்றது.
இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தின் மூலம் உயிரிழந்தவர்களினதும் கடுமையாக காயப்பட்டவர்களினதும் குடும்ப உறுப்பினர்களுக்கும், அதனால் பெரிதும் கவலைக்குள்ளான கத்தோலிக்க மக்களுக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் நான் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலினால் சுமார் 270பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமுற்றனர். காயமடைந்தவர்களில் சிலர் பின்னர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் அங்கவீனமுற்றுள்ளனர்.
தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தவர்கள் என்ற போதும் அது அவர்களை மட்டுமன்றி முழு இலங்கை மக்களையும் இலக்கு வைத்த பயங்கரவாத நடவடிக்கையாகும்.
எந்த சிந்தனையின் பெயரில் இந்த மனிதப் படுகொலை இடம்பெற்றாலும் இது மனித இனத்திற்கே இழுக்கான ஒன்றாகும என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எந்தவகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும் இடமளிக்கப்போவதில்லை எனச்சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வகைகூறவேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவேன் என உறுதியளித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை மறந்து பாதுகாப்பு திட்டங்களும் ஏற்பாடுகளும் கைவிடப்பட்டிருந்த காரணத்தினாலேயே உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலைக்கு வசதியான பின்னணி உருவானது.
அத்தகையதொரு கட்டற்ற சூழலில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவது ஆச்சரியமான ஒன்றல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான, பாதிப்புக்கு உள்ளான கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு நான் மீண்டும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.