இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (17) முற்பகல் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையத்தில் நாளொன்றுக்கு 600-800 டொன் நகர திண்ம கழிவை பயன்படுத்தி தேசிய மின் கட்டமைப்பிற்கு 10 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பதற்கான நினைவு பலகையை திறந்துவைத்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அத்தோடு கொழும்பு நகரம் சார்ந்து காணப்படும் நகர திண்மக்கழிவை அகற்றுவதற்கு இதன்மூலம் நிலையான தீர்வொன்று ஏற்படுத்தப்படும். அத்துடன், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திற்கும் இத்திட்டம் நிலையான தீர்வாக அமையும். கொழும்பு நகர சபை, எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து இத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்துள்ளது.
இத்திட்டத்திற்காக எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனம் ரூபாய் 15 பில்லியனை செலவிட்டுள்ளது. மிகவும் அழகான சுத்தமான நகர்ப்புற சூழலை உருவாக்குவதற்கும், குடிமக்களின் வாழ்க்கை நிலையை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
இந் நிகழ்வில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, சீ.பீ.ரத்நாயக்க, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, நாலக கொடஹேவா, சீதா அரம்பேபொல, நிமல் லன்சா மற்றும் மேல் மாகாண ஆளுநர் மார்ஸல் ஒஃப் த ஸ்ரீலங்கா எயார் ஃபோஸ் ரொஷான் குணதிலக, எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹெரி ஜயவர்தன, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, மின்சக்தித்துறை அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.