முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள நிலையில் தனக்காக பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹொரகொல்லையில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு பலமணிநேரம் சுதந்திரமாக நடமாடி வீட்டில் உள்ள பொருட்களை ஆராய்ந்த சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்கள் எந்தபொருளையும் கொண்டு செல்லவில்லை இதன் காரணமாக அவர்களின் நோக்கம் திருடுவது இல்லை என சந்தேகம் எழுந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இம்முறைப்பாட்டை தொடர்ந்து, காவல்துறையினர் ஹொரகொல்லை வீட்டிற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி இது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தேவையற்ற ஆபத்தான நடவடிக்கைக்கான ஒத்திகையாகயிருக்கலாம் என கருதுவதாகவும், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.