இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.
இதனால் சீனாவிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் அமெரிக்கா தீவிரமாக செய்து வருகிறது. உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த தேவையான விஷயங்களை அமெரிக்கா செய்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக ஜி7 மாநாட்டை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவும், ரஷ்யாவும் ஜி 7 நாடுகளில் இணைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரிக்கை வைத்து உள்ளார்.
அதோடு அவுஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார். ஜி 7 என்பது 7 நாடுகள் குழு ஆகும்.இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது. இதில் தான் இந்தியா,ரஷ்யாவை சேர்க்க டிரம்ப் முயன்று வருகிறார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு டிரம்ப் நேற்று தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் வருகையை எதிர்பார்க்கிறோம் என்று டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார். இந்தியாவும் இந்த அழைப்பை ஏற்றுள்ளது.இந்தியாவின் இந்த முடிவு சீனாவிற்கும் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் கூறுகையில்,
அமெரிக்காவின் திட்டம் எங்களுக்கு புரிகிறது.உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால் அமெரிக்காவின் திட்டம் பலிக்காது. ஜி7 நாடுகள் என்பது உலகின் அமைதி குறித்து சிந்திக்க வேண்டும்.
ஒரு மாநாடு என்பது உலகின் ஒற்றுமைக்கு வித்திட வேண்டும். அமைதிக்கான உடன் படிக்கையை செய்ய வேண்டும்.ஆனால் அமெரிக்கா திட்டமிடும் ஜி7 மாநாடு அப்படி இல்லை.